டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ரிங்கு சிங் ஏன் தேர்வு செய்யப்படவில்லை..? அகர்கர் விளக்கம்

டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ரிங்கு சிங் ஏன் தேர்வு செய்யப்படவில்லை..? அகர்கர் விளக்கம்
Published on

மும்பை,

20 அணிகள் கலந்துகொள்ள உள்ள 9-வது உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. இதில் இந்திய அணி 'ஏ' பிரிவில் பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. இந்தியா தனது தொடக்க ஆட்டத்தில் வரும் ஜூன் 5-ந்தேதி அயர்லாந்துடன் நியூயார்க் நகரில் மோதுகிறது.

இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. கேப்டனாக ரோகித் சர்மா நீடிக்கும் நிலையில், துணை கேப்டன் பொறுப்பு ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த அணியில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல விக்கெட் கீப்பர்களாக நல்ல பார்மில் உள்ள ரிஷப் பண்ட் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் தேர்வாகியுள்ளது ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

ஆனால் இந்த அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இளம் வீரர் ரிங்கு சிங் கழற்றி விடப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது. ஏனெனில் கடந்த ஐ.பி.எல். தொடரில் குஜராத்துக்கு எதிராக 5 சிக்சர்கள் அடித்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்த அவர் இந்தியாவுக்காக அறிமுகமானார். அந்த வாய்ப்பில் பெரும்பாலான போட்டிகளில் அட்டகாசமாக செயல்பட்ட அவர் 2023 ஆசிய விளையாட்டு போட்டிகள், தென் ஆப்பிரிக்க தொடர், 2024 ஆப்கானிஸ்தான் டி20 தொடர்களில் சிறந்த பினிஷராக செயல்பட்டு இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார்.

இருப்பினும் தற்போதைய ஐ.பி.எல். தொடரில் பெரிய ரன்கள் எடுக்கத் தவறினார் என்ற ஒரே காரணத்திற்காக ரிங்குவை கழற்றி விட்டுள்ள தேர்வு குழு ரிசர்வ் பட்டியலில் மட்டுமே இணைத்துள்ளது.

இந்நிலையில் டி20 உலகக்கோப்பையில் கழற்றி விடும் அளவுக்கு ரிங்கு சிங் எந்த தவறும் செய்யவில்லை என்று தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார். இருப்பினும் 15 பேர் கொண்ட அணியை மட்டுமே தேர்வு செய்ய முடியும் என்பதால் துரதிஷ்டவசமாக அவரை தேர்ந்தெடுக்க முடியவில்லை என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு:-

"அது மிகவும் கடினமான முடிவு. சுப்மன் கில்லும் அதே நிலையை சந்தித்தார். உங்களிடம் சிறப்பான விக்கெட் கீப்பர்கள் உள்ளனர். இருப்பினும் நாங்கள் கலவையை பார்க்க வேண்டியுள்ளது. இது துரதிஷ்டவசமானது. ரிங்கு சிங் எதையும் தவறாக செய்யவில்லை. அணியில் இடத்தை தவற விட்டது அவருடைய தவறில்லை.

ஏற்கனவே 2 சிறப்பான விக்கெட் கீப்பர்கள் இருப்பதால் 15 வீரர்கள் பூர்த்தியாகினர். எனவே மற்றொரு பவுலர் இருப்பது உதவியாக இருக்கும் என்று நாங்கள் கருதினோம். இப்போதும் ரிங்கு ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் உள்ளார். அந்தளவுக்கு நெருக்கமாக உள்ள அவருக்கு இது கொஞ்சம் கடினமாகும். இருப்பினும் நாளின் இறுதியில் உங்களால் 15 பேரை மட்டுமே தேர்வு செய்ய முடியும்" என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com