

புதுடெல்லி,
10-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் துபாயில் நடந்து வந்தன. இதன் இறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இந்தியாவும், நடப்பு சாம்பியன் இலங்கையும் நேற்றிரவு விளையாடின. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பேட்டிங் தேர்வு செய்ததும், அணியின் தொடக்க வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனாவும், ஷபாலி வர்மாவும் விளையாட தொடங்கினர்.ஷபாலியின் அதிரடியான பேட்டிங்கால் இந்தியா 10.2 ஓவர்களில் 100 ரன்களை தொட்டது. இதே ஓவரில் மந்தனா சிக்சர், பவுண்டரியுடன் 50 ரன்களை கடந்தார். அவருக்கு இது 36-வது அரைசதமாகும். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட்டுக்கு 183 ரன்கள் குவித்தது.
இதனால், 184 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் ஆடிய இலங்கை அணியில் கேப்டன் சமாரி அட்டப்பட்டு (36 ரன்), விஷ்மி குணரத்னே (20 ரன்) அடித்தனர். எனினும், அந்த அணி 20 ஓவர்களில் 111 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. இதன் மூலம் இந்தியா 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையையும் தட்டிச்சென்றது. இந்திய அணி 8-வது முறையாக ஆசிய கோப்பையை கைப்பற்றி உள்ளது.
போட்டி நிறைவடைந்த பின்னர் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் மொஹ்சின் நக்வி கோப்பையை வழங்குவார் என கூறப்பட்டது.
ஆனால், இந்திய பெண்கள் அணி நக்வியிடம் இருந்து கோப்பையை ஏற்க மறுத்து விட்டனர். நக்வி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருப்பதுடன், அந்நாட்டின் உள்துறை மந்திரியாகவும் உள்ளார். கடந்த ஆண்டு ஆசிய கோப்பைக்கான போட்டியில் இந்திய ஆண்கள் அணி இதேபோன்று, நக்வியிடம் இருந்து கோப்பையை பெற மறுத்து விட்டனர்.
இது தொடர்பாக பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா கூறுகையில்,
அந்த நேரத்தில் நிலவிய அனைத்து சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்டு, இந்திய அணி கோப்பை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்காது என்று நாங்கள் முன்கூட்டியே தெளிவான முடிவை எடுத்திருந்தோம். இந்த நிலைப்பாடு குறித்து ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கும் முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே, அப்போதைய சூழ்நிலையில் இந்திய அணி கோப்பை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை” என்று தெரிவித்தார்.
நிலவிய சூழ்நிலையையும், நாட்டில் நிலவிய மக்களின் உணர்வுகளையும் கருத்தில் கொண்டு, முன்மொழியப்பட்ட முறையில் இந்திய அணி கோப்பையைப் பெறுவது பொருத்தமானதாக இருக்காது என்று பிசிசிஐ கருதியது. இது நாங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வரும் நிலைப்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் எடுக்கப்பட்ட உறுதியான முடிவு. இந்த முடிவு வீரர்கள், போட்டி அல்லது கிரிக்கெட் விளையாட்டுக்கு எதிரானது அல்ல. என்று தெரிவித்துள்ளார்.