

லண்டன்,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் 39 வயதான ரோகித் சர்மா டெஸ்ட் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டார்.
2027-ம் ஆண்டு உலகக் கோப்பை வரை தொடர்ந்து ஒரு நாள் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று விரும்புகிறார். ஆனால் அவரது ஆட்டத்திறன் முன்பு போல் இல்லை.
கடைசி 8 ஒருநாள் போட்டிகளில் ஒரு அரைசதம் மட்டுமே அடித்துள்ளார். இதே போல் அடிக்கடி காயத்தாலும் அவதிப்படுகிறார். இதனால் தொடக்க வீரராக அவரது இடத்துக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வாலை கொண்டு வர பயிற்சியாளர் கவுதம் கம்பீரும், தேர்வுகுழு தலைவர் அஜித் அகர்கரும் திட்டமிட்டுள்ளனர். ஜெய்ஸ்வால் கடைசி 3 ஒருநாள் போட்டிகளில் 2 சதம் அடித்தும் வாய்ப்பில்லாமல் வெளியே இருக்கிறார்.
2027-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிக்கு தயார்படுத்தும் அணியின் திட்டத்தில் ரோகித் சர்மா இடம் பெற வாய்ப்பில்லை என அவருக்கு தேர்வு குழு தரப்பில் ஏற்கனவே கூறப்பட்டுள்ள தாம். இதனால் லண்டன் லார்ட்சில் நாளை நடக்கும் இங்கிலாந்துக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி அவரது கடைசி சர்வதேச போட்டியாக இருக்கக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் இது பற்றி அதிகாரபூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஒருநாள் போட்டியில் 3 இரட்டை சதம் அடித்த ஒரே வீரரான ரோகித் சர்மா இதுவரை 287 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 11,757 ரன்கள் குவித்துள்ளார்.
இதற்கிடையே ஓய்வு பெறுவதற்கு ரோகித் சர்மாவுக்கு கிரிக்கெட் வாரியம் அழுத்தம் கொடுப்பதாக வெளியான தகவலை இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் தேவஜித் சைக்யா நேற்றிரவு கூறுகையில், 'லண்டன் லார்ட்ஸ் போட்டி ரோகித் சர்மாவின் கடைசி ஆட்டமாக இருக்காது. இந்த தொடருக்கு பிறகும் அவர் தொடர்ந்து ஒரு நாள் போட்டியில் விளையாடுவார். இந்திய அணியில் ரோகித் சர்மா முக்கியமான வீரராக அங்கம் வகிக்கிறார். அவர் தொடர்ந்து நாட்டிற்காக விளையாடுவார்' என்றார்.