

சென்னை,
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி, ஐபிஎல் 2026 சீசனில் ஒரு போட்டியிலும் விளையாடாமல் முழு தொடரையும் தவறவிட்டுள்ளார். முதலில் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் சீசனின் தொடக்கப் போட்டிகளை மட்டும் தவறவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காயம் குணமடைவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக அவரால் களமிறங்க முடியவில்லை.
சீசன் முடிவில் சென்னை அணியும் பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. தோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில், 2027 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் விளையாடுவது குறித்து தன்னுடைய முடிவை அக்டோபர் மாதம் முதல் வாரத்திற்குள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகத்திடம் தோனி தெரிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வாரத்தில் அமெரிக்கா செல்லும் தோனி, கோல்ப் போட்டிகளில் பங்கேற்று அடுத்த மாதத்தில் மீண்டும் இந்தியா திரும்ப திட்டமிட்டுள்ளார்.