

ஆன்டிகுவா,
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் நேற்று முன்தினம் நடந்தது.
டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 17 ரன்களுக்குள் 2 தொடக்க வீராங்கனைகளை (ஜெமிமா ரோட்ரிக்ஸ் 0, பிரியா பூனியா 5 ரன்) இழந்தாலும், அடுத்து களம் கண்ட பூனம் ராவுத் (77 ரன்கள்), கேப்டன் மிதாலி ராஜ் (40 ரன்கள்), ஹர்மன்பிரீத் கவுர் (46 ரன்கள்) ஆகியோர் நிலைத்து நின்று ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது. தானியா பாட்டியா 9 ரன்னுடனும், ஜூலன் கோஸ்வாமி ஒரு ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். வெஸ்ட்இண்டீஸ் அணி தரப்பில் அலியா, அபி பிளட்செர் தலா 2 விக்கெட் வீழ்த்தினார்கள்.