பெண்கள் ஆசியக் கோப்பை கிரிக்கெட் - பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்த இலங்கை

நாளை இறுதிப்போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் மோதுகின்றன.
ஆசியக் கோப்பை
Published on

துபாய்,

பெண்கள் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இலங்கை - பாகிஸ்தான்

10-வது பெண்கள் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) துபாயில் நடந்து வருகிறது. முதல் அரையிறுதியில் வங்காளதேச அணியை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதையடுத்து நேற்று நடந்த 2-வது அரையிறுதியில் நடப்பு சாம்பியனான இலங்கை அணி, பாகிஸ்தானுடன் மோதியது.

130 ரன்கள்

இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து, பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கத்தில் அந்த அணி தடுமாறிய நிலையில், கேப்டன் பாத்திமா சனா ஆட்டத்தை மாற்றினார். அவர் மிகவும் சிறப்பாக விளையாடி 36 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார். இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 130 ரன்கள் எடுத்தது.

இரட்டை அதிர்ச்சி

இதையடுத்து, 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு, பாத்திமா சனா ஒரே ஓவரில் இரட்டை அதிர்ச்சி கொடுத்தார். சமாரி அதபத்து (5 ரன்), சஞ்சனா கவிந்தி (0) ஆகிய இருவரும் அவரது பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். ஹாசினி பெரேராவும் (3 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை. மற்றொரு தொடக்க வீராங்கனையான இமிஷா துலானி தனது பங்குக்கு 22 ரன்கள் எடுத்தார்.

வெற்றி

33 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து பரிதவித்த இலங்கை அணியை ஹர்ஷிதா சமரவிக்ரமா (36 ரன்), கவிஷா தில்ஹரி (33 ரன்), நிலக்ஷிகா சில்வா (18 ரன்) ஆகியோர் மீட்டனர். இதனால் இலங்கை அணி 18.4 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 134 ரன்கள் எடுத்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது.

இந்தியாவுடன் மோதல்

நாளை இரவு 8 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் மோதுகின்றன.

X

Daily Thanthi
www.dailythanthi.com