பெண்கள் உலகக் கோப்பை: இந்தியாவை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி

தென்ஆப்பிரிக்கா அணி 48.5 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் எடுத்தது.
Image Courtesy : @cricketworldcup
Image Courtesy : @cricketworldcup
Published on

விசாகப்பட்டினம்,

13-வது பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, 7 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா உள்பட 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் 59 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையையும், 2-வது ஆட்டத்தில் 88 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானையும் பதம் பார்த்தது. இந்த நிலையில் விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்ற 10-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, தென்ஆப்பிரிக்காவுடன் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கிய பிரதிகா ராவல் மற்றும் ஸ்மிர்தி மந்தனா இருவரும் சிறப்பாக விளையாடி முறையே 37 மற்றும் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து களமிறங்கிய வீராங்கனைகளில் ரிச்சா கோஷ் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்து 94 ரன்கள் குவித்தார். சினே ராணா 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இறுதியில் 49.5 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 251 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து 252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய தஸ்மின் பிரிட்ஸ் ரன் ஏதுமின்றி அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த சுனே லுஸ் 5 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் ஆனார்.

மற்றோரு தொடக்க வீராங்கனை கேப்டன் லாரா வோல்வார்ட், நிலைத்து நின்று ஆடி அரைசதம் கடந்தார். மரிசேன் காப் 20 ரன்களில் போல்ட் ஆகி வெளியேறினார். அரைசதம் நோக்கி முன்னேறிய கிளோயி டைரன் 49 ரன்களில் விக்கெட்டை இழந்தார். லாரா வோல்வார்ட் 11 பந்துகளில் 70 ரன்கள் எடுத்த நிலையில் போல்ட் ஆனார்.

இறுதி ஓவர்களில் அதிரடி காட்டிய நடீன் டிகிளெர்க், 54 பந்துகளில் 8 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் விளாசி 84 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியில் தென்ஆப்பிரிக்கா அணி 48.5 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com