

மும்பை,
ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான ஏலம் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி ஆஸ்திரேலிய அணியின் அதிரடி தொடக்க வீரர் டேவிட் வார்னரை தங்கள் அணியில் ஏலம் எடுத்தது.
பாகிஸ்தான் தொடரில் தேசிய அணிக்காக விளையாடி வந்ததால் டெல்லி அணியின் போட்டிகளில் வார்னர் தற்போது வரை விளையாடவில்லை. தற்போது இந்தியா திரும்பியுள்ள அவர் லக்னோ அணிக்கு எதிரான அடுத்த ஆட்டத்தில் விளையாடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் லக்னோ அணிக்கு எதிரான அடுத்த போட்டியில் தன்னுடைய அணியில் டேவிட் வார்னரை தேர்வு செய்யமாட்டேன் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில் " லக்னோ அணிக்கு எதிரான டெல்லியின் அடுத்த போட்டியில் நான் டேவிட் வார்னரை தேர்வு செய்யமாட்டேன். ஏனெனில் லக்னோ அணியில் சுழற்பந்துவீச்சாளர் ரவி பிஷ்னாய் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக சிறப்பாக பந்து வீசி வருகிறார்.
இதனால் நான் அவருக்கு எதிராக அதிக வலதுகை பேட்ஸ்மேன்கள் விளையாடுவதை விரும்புவேன். அதனால் வார்னருக்கு பதில் அணியில் டிம் செவேர்ட்டை தேர்வு செய்வேன் " என தெரிவித்துள்ளார்.