நீங்கள் பினிஷர் அல்ல...தோனி போல முயற்சிக்க வேண்டாம்: ரிஷப் பண்ட்-க்கு இந்திய வீரர் அறிவுரை

டெல்லிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ரிஷப் பண்ட் 7-வது இடத்தில் பேட்டிங் செய்ய களமிறங்கினார்.
Image Courtesy: @IPL / @ChennaiIPL
Image Courtesy: @IPL / @ChennaiIPL
Published on

லக்னோ,

ஐ.பி.எல். தொடரில் லக்னோவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. லக்னோ தரப்பில் அதிகபட்சமாக மார்க்ரம் 52 ரன் எடுத்தார்.

டெல்லி தரப்பில் முகேஷ் குமார் 4 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 160 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணி 17.5 ஓவரில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 161 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டெல்லி தரப்பில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 57 ரன் எடுத்தார். இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது முகேஷ் குமாருக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில், இந்த போட்டியில் லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் 7வது இடத்தில் பேட்டிங் செய்ய களம் இறங்கினார். டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட நேற்று 7வது இடத்தில் பேட்டிங் செய்ய களம் இறங்கியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், ரிஷப் பண்ட் ஒன்றும் தோனி போல பினிஷர் கிடையாது.

எனவே, தோனி போல செய்ய முயற்சிக்க வேண்டாம் என ரிஷப் பண்ட்-க்கு இந்திய வீரர் செத்தேஷ்வர் புஜாரா அறிவுரை வழங்கி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, ரிஷப் பண்ட் உண்மையில் என்ன நினைத்து 7-வது வரிசையில் களமிறங்கி விளையாடினார் என்று தெரியவில்லை. அவர் மிடில் வரிசையில் களமிறங்கி விளையாட வேண்டும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

அவர் தோனி செய்ததை செய்ய நினைக்கிறார். ஆனால், அவர் அந்த நிலைக்கு அருகில் கூட இல்லை. 6-வது மற்றும் 15-வது ஓவர்களுக்கு இடையில் மிடில் வரிசையில் பேட்டிங் செய்யக்கூடிய வீரர்களில் ரிஷப் பண்ட் ஒருவர் என்று நான் இன்னும் நினைக்கிறேன். அவர் பினிஷர் கிடையாது, எனவே, ரிஷப் பண்ட் மிடில் வரிசையில் இறங்கி பேட்டிங் செய்வதே சரியானது. இவ்வாறு அவர் கூறினார்.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com