"ஒரே இரவில் நீங்கள் மோசமான வீரராகி விடமாட்டீர்கள் " - கோலி குறித்து ஏபி டிவில்லியர்ஸ் கருத்து

கோலியின் பேட்டிங் "ஃபார்ம்" பற்றி ஏபி டிவில்லியர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
Image Courtesy : BCCI / IPL
Image Courtesy : BCCI / IPL
Published on

மும்பை,

15வது ஐபிஎல் சீசன் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேயில் கடந்த மார்ச் மாதம் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு அணி 5 வெற்றி 5 தோல்விகளுடன் புள்ளி பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.

கடந்த 3 போட்டிகளில் ஹாட்ட்ரிக் தோல்வி அடைந்துள்ள அந்த அணி இன்றைய போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை அணியை எதிர்கொள்கிறது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி பெங்களூரு அணிக்காக நடப்பு சீசனில் முதல் 9 போட்டிகளில் விளையாடி 128 ரன்களை மட்டுமே அடித்து இருந்தார். பின்னர் கடந்த போட்டியில் அவர் அரைசதம் அடித்தார்.

இந்த நிலையில் கோலியின் பேட்டிங் "ஃபார்ம்" பற்றி அந்த அணியின் முன்னாள் அதிரடி வீரரும் தென் ஆப்பிரிக்க அணியின் ஜாம்பவானுமாகிய ஏபி டிவில்லியர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், " ஒரு பேட்ஸ்மேன் ஆக தொடர்ந்து நீங்கள் மோசமான "ஃபார்மில்" இருந்தால் அதிலிருந்து மீள்வது கடினம். மோசமான ஃபார்மிற்கு ஒரு சதவீதத்தை வைக்க முடியாது.

அதே நேரத்தில் நீங்கள் ஒரே இரவில் மோசமான வீரராக ஆகிவிடமாட்டீர்கள். அதை விராட் கோலி அறிவார் அது எனக்கும் நன்கு தெரியும். இவ்வாறு தான் நீங்கள் யோசிக்க வேண்டும் .

நீங்கள் விளையாடும் போதெல்லாம் உங்களுக்கு தெளிவான மனமும் புத்துணர்ச்சியும் தேவை. இதை தொடர்ந்தால் மோசமான "ஃபார்மில்" இருந்து மீள நிச்சயம் ஒரு வழியைக் கண்டுபிடிக்கலாம் " என டிவில்லியர்ஸ் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com