

ஹராரே,
வங்காளதேச கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே வென்றது. இதையடுத்து நடந்த ஒருநாள் தொடரையும் 2-1 என்ற புள்ளி கணக்கில் ஜிம்பாப்வே கைப்பற்றியது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி புலாவாயோ மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 170 ரன்கள் குவித்தது. சிறப்பாக ஆடிய அந்த அணியின் தொடக்க வீரர் பிரைன் பென்னெட் 30 பந்துகளில் 44 ரன்கள் சேர்த்தார்.
வங்காளதேச தரப்பில் அந்த அணியின் நஹித் ரானா அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனை தொடர்ந்து 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் களமிறங்கிய வங்காளதேசத்திற்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர்கள் சைப் ஹசன் 12 ரன்னிலும், தமீம் 16 ரன்னிலும் அவுட் ஆகினார். பின்னர் வந்த வீரர்களும் ஜிம்பாப்வே பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். சற்று நிலைத்து நின்று ஆடிய யாசீர் அலி அதிகபட்சமாக 54 ரன்கள் எடுத்தார்.
இறுதியில் வங்காளதேசம் 19 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 138 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் வங்காளதேசத்தை 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஜிம்பாப்வே அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற புள்ளி கணக்கில் ஜிம்பாப்வே முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டி20 போட்டி நாளை மறுதினம் நடைபெற உள்ளது.