

மும்பை,
இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் சுனில் சேத்ரி, பிரேசில் மற்றும் உருகுவே ஆகிய அணிகளுக்கு எதிராக இந்தியா விளையாடுவதைப் பார்க்கும்போது சற்று பொறாமையாக இருப்பதாக கூறியுள்ளார்.
இந்தியா மற்றும் பிரேசில் அணிகளுக்கு இடையிலான நட்பு ரீதியிலான போட்டி அக்டோபர் 3-ம் தேதி கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதைத்தொடர்ந்து, அதே மைதானத்தில் அக்டோபர் 6-ம் தேதி உருகுவே அணிக்கு எதிரான போட்டியிலும் இந்திய அணி விளையாட உள்ளது. மேலும், செப்டம்பர் மாதத்தில் பனாமா அணியுடன் இந்தியா மோத திட்டமிடப்பட்டுள்ளது. எனினும், அந்தப் போட்டிக்கான தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
இந்நிலையில், சர்வதேச அணிகளுடன் இந்தியா விளையாடுவது குறித்து பேசிய சேத்ரி, தனது 20 ஆண்டுகால கால்பந்து பயணத்தில் பிரேசில் போன்ற மிகப்பெரிய அணியை எதிர்கொள்ளும் வாய்ப்பு தனக்கு கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்காலத்தில் மீண்டும் இந்திய அணியின் சீருடையில் அவரை பார்க்க முடியுமா என்று கேள்விக்கு பதிலளித்த சேத்ரி, “எனக்கு இப்போது கிட்டத்தட்ட 42 வயதாகிறது. என்னால் இப்போது சரியாகக் கூட ஓட முடியவில்லை. சிரமப்படுகிறேன்” என்று நகைச்சுவையாக கூறினார்.
இந்திய கால்பந்து வரலாற்றில் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராக சுனில் சேத்ரி கருதப்படுகிறார். 1984-ம் ஆண்டு ஆகஸ்ட் 3-ம் தேதி செகந்தராபாத்தில் பிறந்த அவர், 2002-ம் ஆண்டு மோகன் பகான் கிளப் மூலம் தனது தொழில்முறை கால்பந்து பயணத்தைத் தொடங்கினார்.
2005-ம் ஆண்டு ஜூன் 12-ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சர்வதேச கால்பந்தில் அறிமுகமான சேத்ரி, அதே போட்டியில் தனது முதல் சர்வதேச கோலையும் பதிவு செய்தார்.
இந்திய அணிக்காக 157 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள சேத்ரி, 95 கோல்களை அடித்துள்ளார். இதன் மூலம் சர்வதேச ஆண்கள் கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளார்.