பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து: சுவீடனை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது ஸ்பெயின்

அரையிறுதி போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் சுவீடனை வீழ்த்தி முதல் அணியாக ஸ்பெயின் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.
image courtesy; twitter/@FIFAWWC
image courtesy; twitter/@FIFAWWC
Published on

பிரிஸ்பேன்,

பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் 11ஆம் தேதி நடைபெற்ற முதல் இரண்டு காலிறுதி போட்டிகளில் நெதர்லாந்தை வீழ்த்தி ஸ்பெயின் அணியும், ஜப்பானை வீழ்த்தி சுவீடன் அணியும் அரையிறுதிக்கு முன்னேறின. அதன்பின் 12ஆம் தேதி கடைசி இரண்டு காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. அதில் பிரான்சை பெனால்டி ஷூட்அவுட்டில் வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து கொலம்பியா அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

இரண்டு நாட்கள் ஓய்வுக்கு பின் முதல் அரையிறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. அதில் ஸ்பெயின் மற்றும் சுவீடன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஸ்பெயின் அணி 2-1 என்ற கோல் கணக்கில் சுவீடனை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. அந்த வகையில் 2023 மகளிர் கால்பந்து உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டிக்கு முதல் அணியாக ஸ்பெயின் தகுதி பெற்றுள்ளது. ஸ்பெயின் அணி தரப்பில் சல்மா பாரலூலோ, ஓல்கா கார்மோனா தலா ஒரு கோல் அடித்தனர். சுவீடன் அணிக்காக ரெபெக்கா ப்ளோம்க்விஸ்ட் மட்டும் ஒரு கோல் அடித்தார்.

இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் நாளை மோத உள்ளன. அதன் பின் மூன்றாம் இடத்திற்கான போட்டி ஆகஸ்ட் 19-ம் தேதியும், இறுதி போட்டி ஆகஸ்ட் 20-ம் தேதியும் நடைபெற உள்ளன.

X

Daily Thanthi
www.dailythanthi.com