உலகக்கோப்பை கால்பந்து தகுதி சுற்று: அர்ஜென்டினா அதிர்ச்சி தோல்வி

இந்த ஆட்டத்தில் அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்ஸி பங்கேற்கவில்லை
கிட்டோ,
23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2026) ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது. 48 அணிகள் பங்கேற்கும் இந்த கால்பந்து திருவிழாவுக்கு போட்டியை நடத்தும் நாடுகளை தவிர்த்து மற்ற அணிகள் தகுதி சுற்று மூலமே நுழைய முடியும். உலகக் கோப்பை போட்டிக்கான தகுதி சுற்று கண்டங்கள் வாரியாக நடந்து வருகிறது.
இதில் தென் அமெரிக்க மண்டல அணிகளுக்கான தகுதி சுற்று போட்டியில் 10 அணிகள் கலந்து கொண்டு மோதி வருகின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக தகுதி பெறும். ஏற்கனவேஅர்ஜென்டினா, பிரேசில், ஈகுவடார் ஆகிய அணிகள் உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டன.
இந்த நிலையில் இந்திய நேரப்படி இன்று நடந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா, ஈகுவடாரை சந்தித்தது. இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய ஈகுவடார் அணி ஆட்ட நேர முடிவில் 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. ஈகுவடார் அணியில் வலன்சியா கோல் அடித்தார்.
இந்த ஆட்டத்தில் அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்ஸி பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






