தேசிய சீனியர் ஆக்கி: தமிழக அணி சாம்பியன்

தேசிய சீனியர் ஆக்கி போட்டியில், தமிழக அணி சாம்பியன் பட்டம் வென்றது.
தேசிய சீனியர் ஆக்கி: தமிழக அணி சாம்பியன்
Published on

சென்னை,

9-வது தேசிய சீனியர் ஆக்கி (பி பிரிவு) சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வந்தது. 41 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் தமிழ்நாடு, மத்திய தலைமை செயலக அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தன. இவ்விரு அணிகள் இடையிலான இறுதி ஆட்டம் நேற்று அரங்கேறியது. இதில் தொடக்கம் முதலே இரு அணி வீரர்களுடன் துடிப்புடன் விளையாடினர். 12-வது நிமிடத்தில் முத்துசெல்வன் பெனால்டி கார்னர் வாய்ப்பில் கோல் அடித்து தமிழக அணிக்கு முன்னிலை ஏற்படுத்தி வந்தார். 20-வது நிமிடத்தில் தலைமை செயலக அணி வீரர் கோவிந்த் சிங் ராவத் கோல் அடித்து சமனுக்கு கொண்டு வந்தார். அதைத் தொடர்ந்து 21-வது நிமிடத்தில் தமிழக வீரர் ராயர் வினோத்தும், 34-வது நிமிடத்தில் தலைமை செயலக வீரர் கோவிந்த் சிங் ராவத்தும் கோல் போட்டனர். அடுத்து 38-வது நிமிடத்தில் தாமுவும் (தமிழகம்), 41-வது நிமிடத்தில் ஞானவேலும் (தலைமை செயலகம்) கோல் அடிக்க ஆட்டம் மறுபடியும் சமநிலையை எட்டியது.

இரு அணி வீரர்களும் முன்னிலை பெற தீவிரம் காட்டிய போது, அவ்வப்போது வாக்குவாதம், தள்ளுமுள்ளுவும் நிகழ்ந்து, ஆட்டத்தில் அனல் பறந்தது. இந்த சூழலில் 56-வது நிமிடத்தில் தமிழக அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதை வினோதன் கோலாக்கி, வெற்றிப்பாதைக்கு வித்திட்டார். இறுதி கட்டத்தில் மத்திய தலைமை செயலக அணி, தங்களது கோல் கீப்பரை வெளியேற்றி விட்டு அவருக்கு பதிலாக மாற்று வீரரை இறக்கியது. கடைசி 3 நிமிடங்களில் அந்த அணி கோல் கீப்பரே இல்லாமல் விளையாடி பார்த்தும் அவர்களின் யுக்திக்கு பலன் கிடைக்கவில்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com