

தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாய குடும்பத்தை சேர்ந்த இளைஞர், இந்திய ஆக்கி அணிக்கு தேர்வாகியுள்ளார். அவர், விரைவில் பெல்ஜியம் நாட்டில் நடைபெற உள்ள சர்வதேச போட்டியில் இந்திய அணி சார்பில் விளையாட உள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் திட்டங்குளம் கிராமத்தை சேர்ந்த தம்பதி விஜயராஜ் - சீனியம்மாள். விஜயராஜ் விவசாயம் செய்து வருகிறார். சீனியம்மாள் தீப்பட்டி தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்று வருகிறார். கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் இவர்களது மகனாக மணிமாறன், சிறு வயது முதலே ஆக்கி விளையாட்டில் ஆர்வம் கொண்டு விளையாடி வந்தார்.
இந்நிலையில், படிப்படியாக முன்னேறி தற்போது இந்திய ஆக்கி அணியின் ஜுனியர் பிரிவுக்கு மணிமாறன் தேர்வாகியுள்ளார். விரைவில் பெல்ஜியம் நாட்டில் நடைபெறவுள்ள சர்வதேச போட்டியில் இந்திய அணி சார்பாக விளையாடவும் உள்ளார். மணிமாறனின் உடன்பிறந்த அண்ணனான அரவிந்த், தற்போது தமிழ்நாடு ஆக்கி அணிக்கு விளையாடி வருவதும், அவரை பின்பற்றி விளையாடி வந்த தம்பி மணிமாறன், தற்போது இந்திய அணிக்கே தேர்வாகி விட்டதும் பெற்றோரை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
தனது மகன் இந்திய ஆக்கி அணிக்கு தேர்வாகி இருப்பது குறித்து தந்தை விஜயராஜ் பெருமிதம் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறுகையில், “எனது மகன் இந்திய ஆக்கி அணியில் தேர்வாகி பெல்ஜியம் நாட்டிற்கு விளையாட செல்ல இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தமிழ்நாட்டில் இருந்து மணிமாறன் ஒருவருக்கு மட்டும்தான் வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர் நல்லபடியாக விளையாடி வெற்றியுடன் வர வேண்டும் என விரும்புகிறேன்” என்று தெரிவித்தார்.