பெண்கள் உலக கோப்பை ஆக்கி: கால்இறுதியில் இந்தியாவை வீழ்த்தியது அயர்லாந்து

பெண்கள் உலக கோப்பை ஆக்கியில், இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அயர்லாந்து அணி வெற்றிபெற்று அரையிறுதிக்கு தகுதிபெற்றது. #WomenWorldCup2018
பெண்கள் உலக கோப்பை ஆக்கி: கால்இறுதியில் இந்தியாவை வீழ்த்தியது அயர்லாந்து
Published on

லண்டன்,

பெண்கள் உலக கோப்பை ஆக்கியின் காலிறுதி ஆட்டத்தில், 3-1 என்ற புள்ளிக்கணக்கில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் இந்தியாவை வென்று அயர்லாந்து அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றது.

16 அணிகள் இடையிலான 14வது பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டிகள் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் இந்திய அணி அயர்லாந்து அணியை எதிர்கொண்டது.

பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் தொடக்கம் முதல் இறுதிவரை இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்துக் கொண்ட முயற்சிகள் பலன் அளிக்காமல் போனது. இதனால் ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் கோலடிக்காமல் சமனில் இருந்தது. இதனால் வெற்றியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை பின்பற்றப்பட்டது.

இதில் அயர்லாந்து அணி சார்பில் ராய்சின் உப்டன், அலிசன் மீக்கி, சோலே வாட்கின்ஸ் ஆகியோர் தலா 1 கோல் அடித்தனர். இந்தியா சார்பில் ரீனா கோக்கர் மட்டுமே ஓரே கோலை அடித்தார். முடிவில் அயர்லாந்து அணி 3-1 என்ற கோல்கணக்கில் இந்திய அணியை வென்றது. இதன் மூலம் அடுத்து நடைபெற உள்ள அரையிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் அணியை எதிர்கொள்கிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com