திரைப்படமாக உருவாகும் செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த்தின் வாழ்க்கை

ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த்தின் வாழ்க்கை திரைப்படமாக உருவாக உள்ளது.
திரைப்படமாக உருவாகும் செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த்தின் வாழ்க்கை
Published on

புதுடெல்லி:

செஸ் விளையாட்டில் முடிசூடா மன்னனாக திகழும் விஸ்வநாதன் ஆனந்த்தின் வாழ்க்கை திரைப்படமாக உருவாக உள்ளது. சுண்டியல் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கவுள்ள விஸ்வநாதன் ஆனந்தின் வாழ்க்கை திரைப்படத்தை ஆனந்த் எல் ராய் இயக்குகிறார்.

விஸ்வநாதன் ஆனந்த்தின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுப்பது குறித்து பலர் அவரை அணுகினர். ஆனால் விஸ்வநாதன் ஆனந்த் யாருக்கும் திரைப்படம் எடுக்கும் அனுமதியை வழங்க மறுத்து வந்தார். இப்போதுதான் காலம் கனிந்துள்ளது. செஸ் உலக ஜாம்பவான் ஆனந்த், தனது வாழ்க்கையை திரைப்படமாக்க ஒப்புதலைக் கொடுத்திருக்கிறார்.

'தனு வெட்ஸ் மனு', 'ஜீரோ' போன்ற திரைப்படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் ஆனந்த் எல் ராய் இந்த படத்தை இயக்க உள்ளார்.

தற்போது முதல் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. நடிகர், நடிகையர், தொழில்நுட்பக் குழுவினர் என இதுவரை இறுதி செய்யப்படவில்லை. இதுகுறித்த அறிவிப்பை தயாரிப்புக் குழு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படம் 2021 ஆம் ஆண்டில் வெளிவர உள்ளது. செஸ் பிரபலம் ஆனந்தின் வாழ்க்கை பயணத்தை விவரிக்கும் இந்த திரைப்படம், அவரது குழந்தை பருவம் முதல் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக செஸ் உலகில் அவரது ஆளுமையை விரிவாகப் பேசும். விஸ்வநாதன் ஆனந்த் ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவர் ஆவார்.

பல இந்திய பிரபல வீரர்களின் வாழ்க்கை, திரைப்படமாக தயாரிக்கப்பட்டு உள்ளன. சச்சின் தெண்டுல்கர், மகேந்திர சிங் தோனி, முகமது அசாருதீன், மில்கா சிங், மேரி கோம்,என பலரின் வாழ்க்கை திரைப்படமாக எடுக்கபட்டது. தற்போது, சாய்னா நேவால், அபிநவ் பிந்த்ரா, பி.வி.சிந்து என இன்னும் சில பிரபலங்களின் வாழ்க்கையும் திரைப்படங்களாக எடுக்கப்பட்டு வருகின்றன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com