

கிளாஸ்கோ,
ஆண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவின் ராஜா முத்துப்பாண்டி வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார்.
23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் 74 நாடுகளைச் சேர்ந்த சுமார் 3 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 123 பேர் கொண்ட அணி பல்வேறு பிரிவுகளில் களமிறங்கி பதக்க வேட்டையில் ஈடுபட்டு வருகிறது.
அந்தவகையில், ஆண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டி நடைபெற்றது. அதில், இந்தியா சார்பில் போட்டியிட்ட தமிழகத்தை சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். ஸ்னாட்ச் (Snatch) பிரிவில் 126 கிலோவும், கிளீன் & ஜெர்க் (Clean & Jerk) பிரிவில் 160 கிலோவும் என மொத்தம் 286 கிலோ எடையைத் தூக்கி வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.
இந்த வெற்றியின் மூலம், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கத்தை ராஜா முத்துப்பாண்டி பெற்றுத்தந்துள்ளார்.
மலேசியாவின் முஹம்மது அஸ்னில் பின் பிடின், மொத்தம் 299 கிலோ எடையைத் தூக்கி தங்க பதக்கத்தை வென்றார். அதேவேளையில், பப்புவா நியூ கினியாவின் மோரியா பாரு மொத்தம் 282 கிலோ எடையைத் தூக்கி வெண்கல பதக்கத்தை கைப்பற்றினார்.