ஆசிய பேட்மிண்டன் போட்டி இந்திய அணி அரைஇறுதியில் தோல்வி

ஆசிய அணிகளுக்கான பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடந்து வருகிறது.
ஆசிய பேட்மிண்டன் போட்டி இந்திய அணி அரைஇறுதியில் தோல்வி
Published on

மணிலா,

நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய அணி, நடப்பு சாம்பியனான இந்தோனேஷியாவை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 2-3 என்ற கணக்கில் வலுவான இந்தோனேஷியாவிடம் தோல்வி அடைந்தது. தோல்வி கண்ட இந்திய அணி வெண்கலப்பதக்கத்துடன் திருப்தி அடைந்தது. ஆசிய போட்டியில் இந்திய ஆண்கள் அணி வெண்கலப்பதக்கம் வெல்வது இது 2-வது முறையாகும். ஏற்கனவே 2016-ம் ஆண்டில் ஐதராபாத்தில் நடந்த ஆசிய போட்டியில் வெண்கலம் வென்று இருந்தது.

ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சாய் பிரனீத், அந்தோணி ஜின்டிங்க்கு எதிரான ஆட்டத்தில் 6-21 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்த நிலையில் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய இளம் வீரர் லக்ஷயா சென் 21-18, 22-20 என்ற நேர்செட்டில் ஆசிய விளையாட்டு போட்டி சாம்பியன் ஜோனதன் கிறிஸ்டியை வீழ்த்தினார். இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அர்ஜூன்-துருவ் கபிலா ஜோடி 10-21, 21-14, 21-23 என்ற செட் கணக்கில் முகமது அஹ்சன்-ஹென்ட்ரா செடியாவான் இணையிடம் வீழ்ந்தது. ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சுபாங்கர் தேவ் 21-17, 21-15 என்ற நேர்செட்டில் ஷிசர் ஹிரென் ருஸ்தாவிடோவுக்கு அதிர்ச்சி அளித்தார். இதனால் இந்திய அணி 2-2 என்ற கணக்கில் சமநிலையை எட்டியது. கடைசி இரட்டையர் ஆட்டத்தில் இந்தியாவின் சிராக் ஷெட்டி-லக்ஷயா சென் இணை 6-21, 13-21 என்ற நேர்செட்டில் மார்கஸ் பென்னால்டி ஜிடோன்-கெவின் சஞ்சயா சுகாமுல்ஜோ ஜோடியிடம் தோல்வி அடைந்ததால் இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com