தடகள வீராங்கனை டூட்டி சந்த்துக்கு 4 ஆண்டுகள் தடை

ஊக்க மருந்து பயன்படுத்திய விவகாரத்தில் டூட்டி சந்த்துக்கு போட்டிகளில் பங்கேற்க 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
image courtesy; AFP
image courtesy; AFP
Published on

புது டெல்லி,

இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனை டூட்டி சந்த். 100 மீட்டர் ஓட்டத்தில் தேசிய சாதனையாளராக உள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி அவரிடம் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரியை சோதனை செய்ததில் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவருக்கு கடந்த ஜனவரி மாதம் இடைக்கால தடை விதித்து சர்வதேச ஊக்க மருந்து தடுப்பு முகமை உத்தரவிட்டது.

இதை எதிர்த்து அவர் மேல் முறையீடு செய்தார். இந்த நிலையில் ஊக்க மருந்து பயன்படுத்திய விவகாரத்தில் டூட்டி சந்த்துக்கு போட்டிகளில் பங்கேற்க 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த தடை காலம் இந்த ஆண்டு ஜனவரி 3ஆம் தேதியில் இருந்து கணக்கில் எடுத்து கொள்ளப்படுகிறது. மாதிரி சேகரிப்பு தேதியில் இருந்து அவர் பெற்ற பரிசுகள் மற்றும் விருதுகள் அனைத்தும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளன.

அவர் விதி மீறலை வேண்டுமென்றே செய்யவில்லை என்பதை நிரூபிக்க தவறிவிட்டதாக தேசிய ஊக்க மருந்து எதிர்ப்பு ஒழுங்கு முறை குழு தெரிவித்துள்ளது. இந்த தடை உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்ய டூட்டி சந்த்துக்கு 21 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com