உலக பேட்மிண்டன் போட்டி: இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி வெண்கலப் பதக்கம் வென்றனர்

உலக பேட்மிண்டனில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்திய ஜோடி என்ற வரலாற்று சாதனையை படைத்தனர்.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

டோக்கியோ,

27-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவின் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி, நடப்பு சாம்பியனும், உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ஜப்பானின் தகுரோ ஹோகி-யுகோ கோபாயாஷி இணையை எதிர் கொண்டது.

இந்த ஆட்டத்தில் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தனர். இந்நிலையில், அரையிறுதி ஆட்டத்தில் இந்த இணை மலேசியாவின் ஆரோன் சியா-சோ யூ யிக் இணையை சந்தித்தது.

இந்த ஆட்டத்தில் 22-20 என முதல் செட்டில் முன்னிலை பெற்ற சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி அடுத்த இரண்டு செட்களில் 18-21,16-21 என்ற புள்ளிகணக்கில் போராடி தோல்வியுற்றனர். இதன் மூலம் அவர்களுக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்தது.

இந்த வெண்கலப்பதக்கத்தின் மூலம் உலக பேட்மிண்டனில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்திய ஜோடி என்ற வரலாற்று சாதனையை படைத்தனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com