தாய்லாந்து ஓபன் குத்துச்சண்டை: 3 இந்திய வீரர்கள் தங்கம் வென்றனர்

தாய்லாந்து ஓபன் சர்வதேச குத்துச்சண்டை போட்டி அங்குள்ள புகெட் தீவில் நடந்தது.
தாய்லாந்து ஓபன் குத்துச்சண்டை: 3 இந்திய வீரர்கள் தங்கம் வென்றனர்
Published on

இதில் ஆண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் கோவிந்த் சஹானி 5-0 என்ற கணக்கில் தாய்லாந்தின் நத்தாபோன் தும்சரோனை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இதேபோல் 75 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் சுமித் 5-0 என்ற கணக்கில் தாய்லாந்தின் பீதாபத் யாசுங்னோனையும், 54 கிலோ பிரிவில் இந்திய வீரர் ஆனந்தா பிரல்ஹட் 5-0 என்ற கணக்கில் ரிதிமோன் சாங்சவாங்கையும் (தாய்லாந்து) துவம்சம் செய்து தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினர். மற்ற இந்திய வீரர்கள் அமித் பன்ஹால் (52 கிலோ), வரிந்தர் சிங் (60 கிலோ), ஆஷிஷ் குமார் (81 கிலோ), இந்திய வீராங்கனை மோனிகா (48 கிலோ) ஆகியோர் தங்களது இறுதிப்போட்டியில் தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று.

இந்த குத்துச்சண்டை தொடரில் இந்தியா 3 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 10 பதக்கங்களை அறுவடை செய்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்திய அணி கூடுதலாக 2 தங்கப்பதக்கம் வென்றுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com