

இதில் ஓபன் பிரிவில் 208 அணிகளும், பெண்கள் பிரிவில் 192 அணிகளும் பங்கேற்றுள்ளன. 11 சுற்றுகள் கொண்ட இந்த செஸ் திருவிழாவில் நேற்று முதலாவது சுற்று ஆட்டங்கள் நடந்தன.
ஓபன் பிரிவில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, தாய்லாந்தை எதிர்கொண்டது. உலக சாம்பியனான தமிழகத்தை சேர்ந்த குகேஷ், தாய்லாந்தின் பேரிஸ் ரஷித் அல்ரியாமியுடன் மோதினார். வெள்ளை நிற காய்களுடன் ஆடிய குகேஷ் 37-வது காய் நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
நிஹால் ஜரின், விதித் குஜராத்தி ஆகியோரும் தங்களது ஆட்டத்தில் வெற்றி கண்டனர். அதே சமயம் அர்ஜூன் எரிகசி 54-வது நகர்த்தலில் தாய்லாந்தின் லாவ்ஹாவீரப்பா பிரினிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
நட்சத்திர வீரர் பிரக்ஞானந்தாவுக்கு முதல் சுற்றில் ஓய்வு அளிக்கப்பட்டது. முடிவில் இந்தியா 3-1 என்ற கணக்கில் தாய்லாந்தை தோற்கடித்து அதற்குரிய 2 புள்ளியை பெற்றது. அமெரிக்கா, உஸ்பெகிஸ்தான், சீனா, ஜெர்மனி, பிரான்ஸ், ஹங்கேரி, அஜர்பைஜான், இங்கிலாந்து, போலந்து அணிகளும் தங்களது ஆட்டங்களில் வெற்றி பெற்றன.
பாகிஸ்தான் அணி, இஸ்ரேலுடன் மோதும் வகையில் அட்டவணை அமைந்திருந்தது. ஆனால் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் பாகிஸ்தான், இஸ்ரேலுக்கு எதிரான ஆட்டத்தை புறக்கணித்தது. இதனால் இஸ்ரேல் களம் இறங்காமலேயே வெற்றி பெற்றது.
பெண்கள் பிரிவில் நடப்பு சாம்பியனான இந்தியா, டொமினிக்கன் குடியரசை சந்தித்தது. தமிழகத்தின் வைஷாலி 31-வது காய் நகர்த்தலில் டிலா ரோசாவை வீழ்த்தினார்.
மற்றொரு தமிழக இளம் வீராங்கனை சவிதா ஸ்ரீ 38-வது நகர்த்தலில் நுனேஸ் டயாஸ் கரியா மியாவை தோற்கடித்தார். கோனெரு ஹம்பி, வந்திகா அகர்வால் ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றியை வசப்படுத்த, இந்தியா 4-0 என்ற கணக்கில் டொமினிக்கன் குடியரசை பந்தாடியது. உஸ்பெகிஸ்தான், ஜார்ஜியா, அமெரிக்கா, கஜகஸ்தான், சீனா, உக்ரைன் உள்ளிட்ட அணிகளும் தங்களது முதல் சுற்றை வெற்றியோடு தொடங்கின. இன்று 2-வது சுற்று ஆட்டங்கள் நடக்கின்றன.