

சால்டில்லோ
உலகக்கோப்பை வில்வித்தை போட்டியில் தங்கம் வென்று இந்தியாவை சேர்ந்த தீரஜ் வரலாறு படைத்துள்ளார்.
மெக்சிகோவில் நடந்த வில்வித்தைக்கான உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவை சேர்ந்த ராணுவ வீரரான தீரஜ் பொம்மதேவரா (வயது 25) வரலாறு படைத்துள்ளார். உலக தரவரிசை பட்டியலில் 10-வது இடத்தில் இருக்கும் தீரஜ் காலிறுதி, அரையிறுதி போட்டிகளில் திறமையாக விளையாடி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இதில், உலக தரவரிசை பட்டியலில் 20-வது இடத்தில் உள்ள நகானிஷியை எதிர்கொண்ட தீரஜ், 28-28, 28-29, 29-28, 28-30, 28-27 என 5 செட்டுகள் விளையாடி டை-யில் (சமன்) ஆட்டம் வந்தபோது, ஷூட் ஆப் முறையில் போட்டி தொடர்ந்தது. இதில், 10-9 என்ற புள்ளி கணக்கில் தீரஜ் முன்னிலை பெற்றதுடன் போட்டியை 6-5 என வென்றார்.
அதனுடன், உலகக்கோப்பை ரிகர்வ் வில்வித்தை ஆடவர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
இதேபோன்று ஆடவர் பிரிவில், இந்தியர் ஒருவர் ரிகர்வ் வில்வித்தையில் பதக்கம் வெல்வதற்கான 16 ஆண்டு கால காத்திருப்பும் முடிவுக்கு வந்துள்ளது. இதற்கு முன்னர், 2010-ம் ஆண்டில் எடின்பர்க்கில் நடந்த போட்டியில் ஜெயந்த தலுக்தர் வெண்கல பதக்கம் வென்றார்.