உலகக்கோப்பை வில்வித்தையில் தங்கம் வென்று வரலாறு படைத்த தீரஜ்

உலகக்கோப்பை ரிகர்வ் வில்வித்தை ஆடவர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
உலகக்கோப்பை வில்வித்தையில் தங்கம் வென்று வரலாறு படைத்த தீரஜ்
Published on

சால்டில்லோ

உலகக்கோப்பை வில்வித்தை போட்டியில் தங்கம் வென்று இந்தியாவை சேர்ந்த தீரஜ் வரலாறு படைத்துள்ளார்.

மெக்சிகோவில் நடந்த வில்வித்தைக்கான உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவை சேர்ந்த ராணுவ வீரரான தீரஜ் பொம்மதேவரா (வயது 25) வரலாறு படைத்துள்ளார். உலக தரவரிசை பட்டியலில் 10-வது இடத்தில் இருக்கும் தீரஜ் காலிறுதி, அரையிறுதி போட்டிகளில் திறமையாக விளையாடி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

ஷூட் ஆப் முறை

இதில், உலக தரவரிசை பட்டியலில் 20-வது இடத்தில் உள்ள நகானிஷியை எதிர்கொண்ட தீரஜ், 28-28, 28-29, 29-28, 28-30, 28-27 என 5 செட்டுகள் விளையாடி டை-யில் (சமன்) ஆட்டம் வந்தபோது, ஷூட் ஆப் முறையில் போட்டி தொடர்ந்தது. இதில், 10-9 என்ற புள்ளி கணக்கில் தீரஜ் முன்னிலை பெற்றதுடன் போட்டியை 6-5 என வென்றார்.

அதனுடன், உலகக்கோப்பை ரிகர்வ் வில்வித்தை ஆடவர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

வெண்கல பதக்கம்

இதேபோன்று ஆடவர் பிரிவில், இந்தியர் ஒருவர் ரிகர்வ் வில்வித்தையில் பதக்கம் வெல்வதற்கான 16 ஆண்டு கால காத்திருப்பும் முடிவுக்கு வந்துள்ளது. இதற்கு முன்னர், 2010-ம் ஆண்டில் எடின்பர்க்கில் நடந்த போட்டியில் ஜெயந்த தலுக்தர் வெண்கல பதக்கம் வென்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com