'பிரீஸ்டைல்' செஸ் தொடர்: 8-வது இடம் பிடித்தார் உலக சாம்பியன் குகேஷ்

Image Courtesy: @chesscom_in / X (Twitter)
'பிரீஸ்டைல்' செஸ் தொடரில் ஜெர்மனியின் வின்சென்ட் கெய்மர் சாம்பியன் பட்டம் வென்றார்.
பெர்லின்,
உலக சாம்பியன் குகேஷ், ஐந்து முறை உலக சாம்பியனான நார்வேயின் கார்ல்சன் உள்பட 10 முன்னணி வீரர்கள் கலந்து கொண்ட 'பிரீஸ்டைல்' செஸ் தொடர் ஜெர்மனியில் நடைபெற்றது. இந்த தொடரில் முதல் நாளில் இருந்தே உலக சாம்பியன் குகேஷ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.
இதன் காரணமாக புள்ளிப்பட்டியலில் 7வது (3 புள்ளிகள்) இடம் பிடித்தார். தொடர்ந்து நடைபெற்ற காலிறுதியில் ஏமாற்றம் அளித்த குகேஷ், 5 அல்லது 6வது இடத்திற்கான போட்டியிலும் தோல்வி கண்டார்.
இதையடுத்து 7 அல்லது 8வது இடத்திற்கான மோதலில் இந்தியாவின் குகேஷ், ஈரானின் அலிரேசாவை எதிர்கொண்டார். இருவருக்கும் இடையிலான முதல் போட்டி 'டிரா' ஆனது. இதையடுத்து நேற்று 2வது போட்டி நடைபெற்றது.
வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய குகேஷ், தொடக்கத்தில் இருந்தே மோசமாக செயல்பட்டார். வேறு வழியில்லாத நிலையில் 30-வது நகர்த்தலில் குகேஷ் தோல்வியடைய, தொடரில் அவர் 8வது இடமே பெற்றார். அவருக்கு ரூ. 17.32 லட்சம் பரிசுத்தொகையாக கிடைத்தது.
இந்த தொடரின் இறுதிப்போட்டியில் ஜெர்மனியின் வின்சென்ட் கெய்மர், 1.5-0.5 என்ற புள்ளிக்கணக்கில் அமெரிக்காவின் பேபியானோ காருணாவை வீழ்த்தி சாம்பியன் ஆனார். அவர் ரூ. 1.73 கோடியை பரிசுத்தொகையாக பெற்றார்.






