ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன்: சிந்து, ஸ்ரீகாந்த் பங்கேற்பு!

ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன் போட்டி முல்கேம் அன்டெர் ரூ நகரில் இன்று தொடங்கி 13-ந் தேதி வரை நடைபெறுகிறது.
ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன்: சிந்து, ஸ்ரீகாந்த் பங்கேற்பு!
Published on

பெர்லின்,

பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஒலிம்பிக் போட்டியில் 2 முறை பதக்கம் வென்றவரான இந்தியாவின் முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து கலந்து கொள்கிறார். அவர் தனது முதலாவது சுற்று ஆட்டத்தில் உலக தரவரிசையில் 11-வது இடத்தில் உள்ள பூசனன் ஓங்பாம்ருங்பானை (தாய்லாந்து) சந்திக்கிறார்.

இதேபோல் காயம் காரணமாக பார்மில் இல்லாமல் தவித்து வரும் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தனது முதல் சுற்று ஆட்டத்தில் சிங்கப்பூரை சேர்ந்த யோ ஜியா மின்னை எதிர்கொள்கிறார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலக போட்டியில் பதக்கம் கைப்பற்றியவரான இந்திய வீரர் ஸ்ரீகாந்த் முதல் சுற்று ஆட்டத்தில் பிரைஸ் லிவெர்டெஸ்சுடன் (பிரான்ஸ்) மோதுகிறார். கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்து இருக்கும் ஸ்ரீகாந்த் எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

உலக போட்டியில் பதக்கம் வென்ற இந்திய இளம் வீரரான லக்ஷயா சென் தனது முதல் சுற்று ஆட்டத்தில் தாய்லாந்தின் கான்டபோன் வாங்சரோனை சந்திக்கிறார். இந்திய வீரர்கள் பிரனாய், காஷ்யப் ஆகியோரும் களம் இறங்குகிறார்கள்.

ஆண்கள் இரட்டையர் பிரிவில் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி, துருவ் கபிலா-எம்.ஆர்.அர்ஜூன் ஜோடியும், பெண்கள் இரட்டையர் பிரிவில் அஸ்வினி-சிக்கி ரெட்டி, திரிஷா ஜாலி-காயத்ரி இணையும், கலப்பு இரட்டையர் பிரிவில் இஷான் பத்நாகர்-தனிஷா, சாய் பிரதீக்-சிக்கி ரெட்டி ஜோடியும் பங்கேற்கிறார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com