

கிளாஸ்கோ,
இரட்டை சாம்பியனான இந்திய பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு, நடப்பு காமன்வெல்த் விளையாட்டின் பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் இறுதிப்போட்டியில் தங்கம் வென்று அசத்தி உள்ளார். ஒலிம்பிக் பதக்கம் வென்ற மீராபாய் சானு ஸ்னாட்ச் பிரிவில் 85 கிலோ எடையைத் தூக்கி புதிய காமன்வெல்த் சாதனையைப் படைத்தார்.
மீராபாய் சானு தனது முதல் முயற்சியில் 82 கிலோ எடையைத் தூக்கத் தவறியபோதிலும், இரண்டாவது முயற்சியில் அதே எடையைத் தூக்குவதில் வெற்றி பெற்றார். பின்னர் தனது இறுதி முயற்சியில் 85 கிலோ எடையைத் தூக்கி, போட்டி மற்றும் காமன்வெல்த் அளவிலான புதிய சாதனைகளை அவர் நிலைநாட்டினார். மீராபாய் சானு ஏற்கனவே 2018 மற்றும் 2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதலில் தங்கப் பதக்கம் வென்ற பிறகு செய்தியாளர்களிடம் மீராபாய் சானு கூறியதாவது:-
இந்தியாவுக்காக மூன்றாவது தங்கப் பதக்கத்தை பெற்று தந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். என் மனதில் பல எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன. சற்று அழுத்தமும் இருந்தது. இந்திய பளுதூக்குதல் அணிக்காக மிகச் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று நான் விரும்பினேன். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் எனது மூன்றாவது தங்கப் பதக்கத்தையும், ஒட்டுமொத்தமாக நான்காவது பதக்கத்தையும் வென்றதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையே தனது குடும்பத்தினர் மற்றும் பயிற்சியாளரின் ஆதரவு குறித்துப் பேசும்போது மீராபாய் சானு உணர்ச்சிவசப்பட்டார்.