கொரியா ஓபன் பேட்மிண்டன்: சாத்விக்-சிராக் ஜோடி கால்இறுதிக்கு தகுதி

கொரியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி யோசு நகரில் நடந்து வருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

யோசு,

கொரியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி யோசு நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 10-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் 15-21, 21-19, 18-21 என்ற செட் கணக்கில் ஹாங்காங்கின் லீ செக் யுயிடம் தோற்று வெளியேறினார். இதேபோல் மற்றொரு இந்திய வீரர் பிரியான்ஷூ ரஜாவத் 14-21, 21-18, 17-21 என்ற செட் கணக்கில் 4-ம் நிலை வீரர் நரோகாவிடம் (ஜப்பான்) வீழ்ந்தார். இந்த ஆட்டம் 1 மணி 22 நிமிடம் நீடித்தது.

ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி 21-17, 21-15 என்ற நேர்செட்டில் சீனாவின் ஹீ ஜி டிங்-சோய் ஹாவ் டோங் இணையை வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றது.

பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி 11-21, 4-21 என்ற நேர்செட்டில் தென்கொரியாவின் நா ஹா பாக்-ஹீ சோ லீ இணையிடம் 'சரண்' அடைந்தது. கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் கபூர்-சிக்கி ரெட்டி கூட்டணி 15-21, 12-21 என்ற நேர்செட்டில் சீனாவின் ஜீ யான் பெங்-பிங் டோங் ஹூயாங் ஜோடியிடம் தோற்று நடையை கட்டியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com