

கிளாஸ்கோ,
23-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்து வருகிறது. இதில் 74 நாடுகளைச் சேர்ந்த 3 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா தரப்பில் 123 பேர் கொண்ட படை அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் இரட்டை சாம்பியனான இந்திய பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு, நடப்பு காமன்வெல்த் விளையாட்டின் பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் இறுதிப்போட்டியில் தங்கம் வென்று அசத்தி உள்ளார். ஒலிம்பிக் பதக்கம் வென்ற மீராபாய் சானு ஸ்னாட்ச் பிரிவில் 85 கிலோ எடையைத் தூக்கி புதிய காமன்வெல்த் சாதனையைப் படைத்தார்.
மீராபாய் சானு தனது முதல் முயற்சியில் 82 கிலோ எடையைத் தூக்கத் தவறியபோதிலும், இரண்டாவது முயற்சியில் அதே எடையைத் தூக்குவதில் வெற்றி பெற்றார். பின்னர் தனது இறுதி முயற்சியில் 85 கிலோ எடையைத் தூக்கி, போட்டி மற்றும் காமன்வெல்த் அளவிலான புதிய சாதனைகளை அவர் நிலைநாட்டினார். மீராபாய் சானு ஏற்கனவே 2018 மற்றும் 2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக ஆண்களுக்கான 60 கிலோ பளுதூக்குதல் பிரிவில் இந்திய வீரர் சானம்பம் ரிஷிகாந்த சிங் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
இந்த ஆண்டு இது இந்தியா வாங்கும் முதல் வெள்ளிப் பதக்கமாகும். நேற்று நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டில் இந்திய வலுதூக்குதல் வீரர் ஜாண்டுகுமார் முதல் பதக்கத்தை (வெண்கலம்) வென்றிருந்தார்.