

புதுடெல்லி,
தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டி மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் கடந்த 7-ந்தேதி தொடங்கி வருகிற ஜனவரி 4-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகளான 17 வயது கொண்ட மனு பேக்கர், அனீஷ் பன்வாலா ஆகியோர் தங்களது பிரிவுகளில் இன்று தங்கம் வென்றுள்ளனர்.
அரியானாவை சேர்ந்த மனு பேக்கர் இன்று நடந்த மகளிர் பிரிவுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்றார். அவர் இளநிலை மற்றும் முதுநிலை என இரண்டு நிலைகளிலும் (தனிநபர் மற்றும் குழு போட்டிகள்) கலந்து கொண்டு 4 தங்க பதக்கங்களை வென்றுள்ளார். இதற்கு முன் நடந்த 2 போட்டிகளில் அவர் வெற்றி பெற்றுள்ளார். இதனால் தேசிய சாதனையை சமன் செய்துள்ளார். போட்டியில் 588 புள்ளிகள் எடுத்து, தெற்காசிய போட்டிகளில் அன்னு ராஜ் சிங் செய்த சாதனையையும் பேக்கர் சமன் செய்துள்ளார்.
இதேபோன்று அரியானாவை சேர்ந்த சக வீரரான அனீஷ் பன்வாலா ஆடவருக்கான 25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல் பிரிவில் இளநிலை மற்றும் முதுநிலை என இரண்டு நிலைகளிலும் (தனிநபர் மற்றும் குழு போட்டிகள்) கலந்து கொண்டு 4 தங்க பதக்கங்களை வென்றுள்ளார்.