இந்திய அணிக்காக விளையாடிய கபடி வீரருக்கு தடை: பாகிஸ்தான் அதிரடி

பாகிஸ்தான் கபடி சம்மேளனம் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடிவு செய்தது
கராச்சி,
பக்ரைனில் கடந்த 16-ந்தேதி தனியார் அமைப்பு சார்பில் ஜி.சி.சி. கோப்பைக்கான கபடி போட்டி நடத்தப்பட்டது. இதில் இந்தியா, பாகிஸ்தான், கனடா, ஈரான் போன்ற பெயரில் அணிகள் உருவாக்கப்பட்டு அதன் சார்பில் வீரர்கள் ஜாலியாக பங்கேற்றனர். பெரும்பாலான அணிகளில் அந்தந்த நாட்டை சேர்ந்தவர்களே இடம் பெற்றிருந்தனர்.ஆனால் இந்திய அணியின் சார்பில் களம் இறங்கிய வீரர்களில் பாகிஸ்தானைச் சேர்ந்த சர்வதேச கபடி வீரர் உபைதுல்லா ராஜ்புத்தும் ஒருவர். அவர் இந்திய அணிக்குரிய சீருடை அணிந்தும், தேசிய கொடியை உற்சாகமாக அசைத்தப்படியும் இருக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியது.
இதனை கவனத்தில் கொண்டுள்ள பாகிஸ்தான் கபடி சம்மேளனம் அவர் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடிவு செய்தது.இந்த நிலையில், இந்திய அணிக்காக விளையாடிய உபைதுல்லா ராஜ்புத்தை காலவரையின்றி தடை செய்து பாகிஸ்தான் கபடி கூட்டமைப்பு உத்தரவிட்டுள்ளது.






