

பாசெல்,
சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில், உலக சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, டென்மார்க்கின் மியா பிளிச்பெல்டை சந்தித்தார். 43 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் சிந்து 22-20, 21-10 என்ற நேர்செட்டில் பிளிச்பெல்டை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இதனை தொடர்ந்து இன்று நடந்த இறுதி போட்டியில் ஸ்பெயின் நாட்டின் கரோலினா மரின் மற்றும் இந்தியாவின் பி.வி. சிந்து விளையாடினர். முதல் கேமில் சிந்து சற்று கடினம் ஏற்படுத்தும் வகையில் விளையாடினார்.
2வது கேமில் ஒரு கட்டத்தில் 14-2 என்ற செட் கணக்கில் சிந்துவை திணறடித்து, முழு போட்டியையும் தனது கட்டுக்குள் கொண்டு வந்த மரின் எளிதில் அதனை கைப்பற்றினார். 35 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியின் முடிவில் 12-21, 5-21 என்ற செட் கணக்கில் சிந்துவை வீழ்த்தி வெற்றி பெற்றார். இதனால் இந்திய வீராங்கனை சிந்துவுக்கு வெள்ளி பதக்கம் கிடைத்தது.