

ஹோ சி மின் சிட்டி,
வியட்னாம் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஹோ சி மின் சிட்டி நகரில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் சவுரப் வர்மா 21-12, 17-21, 21-14 என்ற செட் கணக்கில் சன் பெய் ஸியாங்கை (சீனா) போராடி வீழ்த்தி பட்டத்தை தட்டிச்சென்றார். இந்த ஆட்டம் 1 மணி 12 நிமிடங்கள் நீடித்தது.
உலக தரவரிசையில் 38-வது இடம் வகிக்கும் மத்திய பிரதேசத்தை சேர்ந்த 26 வயதான சவுரப் வர்மா கூறுகையில், நான் விளையாடிய விதம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த தொடரில் நான் மூன்று சீன வீரர்களுடன் மோதியிருக்கிறேன். அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான தாக்குதல் பாணியை கடைபிடித்து ஆடக்கூடியவர்கள். அவர்களை வீழ்த்தியது சிறப்பான விஷயமாகும். இந்த பட்டம் எனது நம்பிக்கையை அதிகப்படுத்தியுள்ளது என்றார்.
இதே போல் லிவென் நகரில் நடந்த பெல்ஜியம் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் இந்திய இளம் வீரர் லக்ஷயா சென் 21-14, 21-15 என்ற நேர் செட் கணக்கில் விக்டர் ஸ்வென்ட்சனை (டென்மார்க்) துவம்சம் செய்து பட்டத்தை வசப்படுத்தினார்.