மல்யுத்தத்தை விட்டு ஒதுங்கியது ஏன்? - யோகேஷவர் தத் விளக்கம்

மல்யுத்தத்தை விட்டு ஒதுங்கியது ஏன் என யோகேஷவர் தத் விளக்கமளித்துள்ளார்.
மல்யுத்தத்தை விட்டு ஒதுங்கியது ஏன்? - யோகேஷவர் தத் விளக்கம்
Published on

சோனிபட்,

2012-ம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத் மல்யுத்த போட்டியில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். தற்போது அவர் சக வீரர் பஜ்ரங் பூனியாவுக்கு ஆலோசகராக இருந்து வருகிறார். நேற்று 35-வது பிறந்த நாளை கொண்டாடிய யோகேஷ்வர் தத் மல்யுத்த போட்டியில் இருந்து ஒதுங்கியது ஏன்? என்பது குறித்து அளித்த பேட்டியில், 2020-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லும் அளவுக்கு பஜ்ரங் பூனியாவை தயார்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டியது முக்கியமானதாகும். அவர் சிறந்த வீரர். இருப்பினும் அவர் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும்.

2020-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் நான் பங்கேற்கவில்லை. எனவே பஜ்ரங் பூனியாவுக்கு உதவி செய்வது சிறப்பானதாக இருக்கும். 2020-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்ல பஜ்ரங் பூனியாவுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. நான் நீண்டகாலம் விளையாடி விட்டேன். பஜ்ரங் பூனியா நல்ல பார்மில் இருப்பதாலும், என்னால் அவர் பாதிக்கக்கூடாது என்பதாலும் தான் இந்த ஆண்டு நடந்த உலக போட்டியில் நான் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவித்தார். அரியானாவை சேர்ந்த 24 வயதான பஜ்ரங் பூனியா இந்த ஆண்டு நடந்த காமன்வெல்த் விளையாட்டு, ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்கப்பதக்கமும், உலக போட்டியில் வெள்ளிப்பதக்கமும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com