பெண்கள் உலக குத்துச்சண்டை மேரிகோம் கால்இறுதிக்கு தகுதி

ரஷியாவில் நடக்கும் பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் மேரிகோம் கால்இறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
பெண்கள் உலக குத்துச்சண்டை மேரிகோம் கால்இறுதிக்கு தகுதி
Published on

உலன் உடே,

11-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவில் நடந்து வருகிறது. இதில் 6 முறை சாம்பியனான இந்தியாவின் முன்னணி வீராங்கனை மேரிகோம் முதல்முறையாக 51 கிலோ உடல் எடைப்பிரிவில் களம் கண்டுள்ளார். நேற்று நடந்த 2-வது சுற்று பந்தயத்தில் நேரடியாக களம் இறங்கிய மேரிகோம், வலுவான தாய்லாந்து வீராங்கனை ஜூடாமாஸ் ஜிட்போங்கை சந்தித்தார்.

முதலில் ஜூடாமாஸ்சின் தாக்குதல் ஆட்டத்தை கணிக்கும் வகையில் நிதானமாக செயல்பட்ட மேரிகோம் பிறகு ஆக்ரோஷமாக குத்துகளை விட்டு எதிராளியை திணறடித்தார். முடிவில் மேரிகோம் 5-0 என்ற கணக்கில் ஜூடாமாஸ் ஜிட்போங்கை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார். 48 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை மஞ்சு ராணி ஏற்கனவே கால்இறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

நாளை (வியாழக்கிழமை) நடைபெறும் கால்இறுதியில் மேரிகோம், கொலம்பியா வீராங்கனை லோரினா விக்டோரியா வாலென்சியாவை எதிர்கொள்கிறார்.

75 கிலோ உடல் எடைப்பிரிவில் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் உலக போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான இந்திய வீராங்கனை சவீட்டி பூரா, காமன்வெல்த் விளையாட்டு போட்டி சாம்பியனான வேல்ஸ் வீராங்கனை லூயிஸ் பிரைசுடன் மல்லுக்கட்டினார். விறுவிறுப்பான இந்த போட்டியில் சவீட்டி பூரா 1-3 என்ற கணக்கில் லூயிஸ் பிரைஸ்சிடம் தோல்வி கண்டு வெளியேறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com