உலக தடகள போட்டி: நீரஜ் சோப்ரா உள்ளிட்ட வீரர்களின் வெளிநாட்டு பயிற்சிக்கு நிதியுதவி

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் செப்டம்பர் 13-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை நடக்கிறது.
image courtesy:PTI
image courtesy:PTI
Published on

குருகிராம்,

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் செப்டம்பர் 13-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர், வீராங்கனைகள் தயாராகுவதற்கு வசதியாக வெளிநாடுகளுக்கு சென்று பயிற்சியில் ஈடுபடவும், சர்வதேச போட்டிகளில் பங்கேற்கவும் மத்திய விளையாட்டு அமைச்சகம் அனுமதி அளித்து இருப்பதுடன் அதற்கு தேவையான நிதியுதவிகளையும் அளிக்கிறது.

நடப்பு உலக சாம்பியனான ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, ஐரோப்பிய நாடுகளான பராகுவே மற்றும் செக்குடியரசில் 57 நாட்கள் தங்கி இருந்து பயிற்சி மேற்கொள்ள இருக்கிறார். செப்டம்பர் 5-ந் தேதி வரை அங்கு பயிற்சியில் ஈடுபடும் அவருக்கு ரூ.19 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் பந்தயத்தில் தங்கம் வென்ற வீரரான அவினாஷ் சாப்லே, 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் மற்றும் 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் வெள்ளி வென்ற வீராங்கனையான பாருல் சவுத்ரி, 5 ஆயிரம் மற்றும் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற வீரரான குல்வீர் சிங் ஆகியோர் லாஸ் ஏஞ்சல்சில் (ஜூலை 15 முதல் செப்டம்பர் 3-ந் தேதி வரை) பயிற்சி எடுக்க ரூ.41.29 லட்சம் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் 1,500 மீட்டர் ஓட்டப்பந்தய வீரர் அஜய்குமார், நீளம் தாண்டுதல் வீரர் முரளி ஸ்ரீசங்கர், நீளம் தாண்டுதல் வீராங்கனை ஷைலி சிங் உள்ளிட்டோருக்கும் வெளிநாட்டு பயிற்சிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com