

பாரீஸ்,
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உலக கேப்பை வில்வித்தை ஸ்டேஜ் 3 பேட்டி நடந்து வருகிறது. இதில், கலப்பு இரட்டையர் ரிகர்வ் பிரிவில் இந்தியாவின் தீபிகா குமாரி மற்றும் அட்டானு தாஸ் ஜோடி இறுதி போட்டியில் நெதர்லாந்து ஜோடியை எதிர்கொண்டது. இதில் 5-3 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று இந்திய ஜோடி தங்க பதக்கம் வென்றது.
பெண்களுக்கான அணியில் ரிகர்வ் பிரிவில் மெக்சிகோ அணியை 5-1 என தோற்கடித்து, தீபிகா குமாரி, அங்கிதா பகத், கோமலிகா பரி ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர்.
இதேபோன்று, மகளிர் தனிநபர் ரிகர்வ் போட்டியில் கலந்து கொண்ட தீபிகா குமாரி அதிலும் தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்து உள்ளார். இதனால், அவர் ஒரே நாளில் மகளிர் குழு, கலப்பு குழு மற்றும் தனிநபர் ஆகிய 3 பிரிவுகளில் தங்கம் வென்று சாதனை படைத்து உள்ளார்.