

கலி,
உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் (20 வயதுக்கு உட்பட்டோர்) போட்டி கொலம்பியாவின் கலி நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை ருபல் சவுத்ரி 51.85 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து வெண்கலப்பதக்கம் பெற்றார்.
உத்தபிரதேசத்தை சேர்ந்த 17 வயது மங்கையான ருபல் சவுத்ரி விவசாயியின் மகள் ஆவார். இந்த போட்டியில் இங்கிலாந்து வீராங்கனை எமி மேரி ஜான் (51.50 வினாடி) தங்கப்பதக்கமும், கென்யா வீராங்கனை டமாரிஸ் முதுங்கா (51.71 வினாடி) வெள்ளிப்பதக்கமும் கைப்பற்றினர்.
இந்த போட்டியில் ருபல் சவுத்ரி வென்ற 2-வது பதக்கம் இதுவாகும்.
இதன் மூலம் அவர் உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 2 பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார் . ஏற்கனவே நடந்த 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய அணியிலும் அவர் இடம் பெற்று இருந்தார்.