

லண்டன்,
டாப்-8 வீரர்கள் மட்டும் பங்கேற்றுள்ள ஏ.டி.பி. இறுதிசுற்று டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஹெவிட் பிரிவில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஒரு ஆட்டத்தில் 6 முறை சாம்பியனான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் டொமினிக் திம்மை (ஆஸ்திரியா) தோற்கடித்து அரைஇறுதி வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டார். தொடக்க ஆட்டத்தில் ஜப்பானின் நிஷிகோரியிடம் தோற்று இருந்த பெடரர் அடுத்து தென்ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சனை எதிர்கொள்கிறார்.
குயர்டன் பிரிவில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவை சாய்த்து 2-வது வெற்றியை பெற்றார்.