

வாஷிங்டன்
அமெரிக்காவில் கருப்பு இனத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் (வயது 46) என்பவர், மினியாபொலிஸ் நகரில் போலீசார் பிடியில் கடந்த 25-ந் தேதி கொலை செய்யப்பட்டது, பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த படுகொலையில் நீதி கோரி கருப்பர் இன மக்கள் அமெரிக்க நகரங்களில் ஊரடங்குகளையும் பொருட்படுத்தாமல் வீதிகளில் இறங்கி தொடர்ந்து 8-வது நாளாக போராடி வருகின்றனர்.
ஜார்ஜ் பிளாய்ட் கொலைக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ஜார்ஜ் பிளாய்ட் மரணம் தொடர்பாக எதிர்ப்புக்கள் தொடர்ந்த நிலையில், இன அநீதிக்கு எதிரான #BlackOutTuesday என்ற ஹேஷ்டேக் மூலம் பிரசாரம் நடந்து வருகிறது. இந்த பிரசாரத்தில் டென்னிஸ் வீரர்கள் ரோஜர் பெடரர், ரஃபா நடால் மற்றும் நோவக் ஜோகோவிச் ஆகியோர் இணைந்து உள்ளனர்.
உலக வரிசையில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் ஜோகோவிச் தனது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் "பிளாக் லைவ்ஸ் மேட்டர்" என்ற செய்தியுடன் கருப்பு ஸ்கிரீன் ஷாட்களை வெளியிட்டார், மேலும் ஆண்கள் டென்னிஸின் "பிக் த்ரீ" இன் மற்ற உறுப்பினர்களான பெடரர் மற்றும் நடால் ஆகியோரும் இதில் இணைந்து கொண்டனர்.
கிராண்ட்ஸ்லாம் வெற்றியாளர்களான மரியா ஷரபோவா, பெட்ரா க்விடோவா மற்றும் ஸ்டான் வாவ்ரிங்கா ஆகியோர் இந்த பிரசாரத்திற்கு தங்கள் ஆதரவை தெரிவித்து உள்லனர். ஜப்பானின் நவோமி ஒசாகாவும் பிளாய்டின் மரணம் குறித்து தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்