பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: இரட்டையர் பிரிவில் போபண்ணா ஜோடி கால்இறுதிக்கு தகுதி

பிரெஞ்சு ஓபன் டென்னிசில் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் போபண்ணா ஜோடி கால்இறுதிக்கு தகுதி பெற்றது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

பாரீஸ்,

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் களிமண் தரை மைதானங்களில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 4-வது சுற்றில் 11-ம் நிலை வீரர் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் 4-6, 6-2, 6-1, 6-3 என்ற செட் கணக்கில் தரவரிசையில் 5-வது இடம் வகிக்கும் டேனில் மெட்விடேவுக்கு (ரஷியா) அதிர்ச்சி அளித்து கால்இறுதிக்கு முன்னேறினார். 2004-ம் ஆண்டுக்கு பிறகு பிரெஞ்சு ஓபனில் கால்இறுதியை எட்டிய முதல் ஆஸ்திரேலிய வீரர் இவர் தான்.

இதன் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென் ஜோடி 2-வது சுற்றில் எதிராளி விலகியதால் விளையாடாமலேயே 3-வது சுற்றுக்கு வந்தனர். 3-வது சுற்றில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி- ரேயாஸ் வரெலா மார்ட்டினஸ் (மெக்சிகோ) இணையை சந்தித்தனர். இதில் போபண்ணா கூட்டணி 6-7 (2-7), 6-3, 7-6 (10-8) என்ற செட் கணக்கில் 2 மணி 20 நிமிடங்கள் போராடி வெற்றி பெற்று கால்இறுதி சுற்றை அடைந்தது.

பெண்கள் ஒற்றையர் 4-வது சுற்றில் 2-ம் நிலை வீராங்கனை அரினா சபலென்கா (பெலாரஸ்) 6-2, 6-3 என்ற நேர் செட்டில் எம்மா நவரோவாவை (அமெரிக்கா) பந்தாடினார். 4-ம் நிலை வீராங்கனை எலினா ரைபகினா (கஜகஸ்தான்) 6-4, 6-3 என்ற நேர் செட்டில் ஸ்விடோலினாவை (உக்ரைன்) தோற்கடித்தார்.

மற்றொரு ஆட்டத்தில் இத்தாலியின் ஜாஸ்மின் பாவ்லினி 4-6, 6-0, 6-1 என்ற செட் கணக்கில் அவனிஸ்யானை (ரஷியா) விரட்டியடித்து கால்இறுதிக்குள் நுழைந்தார். தரவரிசையில் 15-வது இடத்தில் உள்ள பாவ்லினி, கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் கால்இறுதிக்குள் கால்பதிப்பது இதுவே முதல்முறையாகும். அடுத்து அவர் ரைபகினாவை சந்திக்கிறார்.

17 வயதான ரஷியாவின் மிரா ஆன்ட்ரீவா தன்னை எதிர்த்த பிரான்சின் வர்வரா கிராசெவாவை 7-5, 6-2 என்ற செட் கணக்கில் சாய்த்து, முதல்முறையாக கால்இறுதிக்கு முன்னேறினார். ஆன்ட்ரீவா கால்இறுதியில் சபலென்காவுடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com