

பாரீஸ்,
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகள் பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீசில் நடந்து வருகின்றன. இதில், நேற்றிரவு (வியாழ கிழமை) நடந்த மகளிர் ஒற்றையர் அரை இறுதி ஆட்டமொன்றில் செக் குடியரசை சேர்ந்த பார்போரா கிரெஜ்சிகோவா மற்றும் கிரீஸ் நாட்டின் மரியா சக்காரி ஆகியோர் விளையாடினர்.
இந்த போட்டியில், முதல் செட்டில் இருவரும் விட்டு கொடுக்காமல் அதிரடியாக விளையாடினர். ஒரு கட்டத்தில், 5-5 என்ற செட் கணக்கில் போட்டி டை ஆகி இருந்தது. அதன்பின்னர் முதல் செட்டை 7-5 என்ற செட் கணக்கில் கிரெஜ்சிகோவா கைப்பற்றினார்.
ஆனால், 2வது செட்டில் சக்காரி தனது அதிரடி ஆட்டத்தின் வழியே 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். அதன் தொடர்ச்சியாக 3வது செட்டை நோக்கி போட்டி சென்றது.
இதில், இரு வீராங்கனைகளும் முழு திறமையை வெளிப்படுத்தினர். இதனால் ஒரு கட்டத்தில் 7-7 என்ற கணக்கில் போட்டி டை ஆகி விறுவிறுப்பு ஏற்படுத்தியது.
எனினும், கிரெஜ்சிகோவா விடாமுயற்சியாக கடுமையாக போராடி 3வது செட்டை தன்வசப்படுத்தினார். இதனால், 7-5, 4-6, 9-7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று செக் குடியரசின் வீராங்கனை கிரெஜ்சிகோவா இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
அவர், ரஷ்யாவின் அனஸ்தசியா பாவ்லியூசெங்கோவாவை மகளிர் ஒற்றையர் இறுதி போட்டியில் எதிர்கொள்கிறார். இதற்கு முன் நடந்த மகளிர் ஒற்றையர் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் ரஷ்ய வீராங்கனை அனஸ்தசியா பாவ்லியூசெங்கோவா, சுலொவேனியா வீராங்கனை தமரா ஜிடன்செக்கை 7-5, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார்.