பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: இரட்டையர் பிரிவில் தமிழக வீரர் ஸ்ரீராம் பாலாஜி வெற்றி

பிரெஞ்சு ஓபன் டென்னிசின் இரட்டையர் பிரிவில் தமிழக வீரர் ஸ்ரீராம் பாலாஜி முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

பாரீஸ்,

'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பாரீசில் களிமண்தரையில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் ஜானிக் சின்னர் (இத்தாலி) 6-4, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் பவெல் கோடோவை (ரஷியா) தோற்கடித்து 4-வது சுற்றை எட்டினார்.

இரட்டையர் பிரிவின் முதலாவது சுற்றில் இந்திய வீரர் ஸ்ரீராம் பாலாஜி- ரியேஸ் வரேலா மார்ட்டினஸ் (மெக்சிகோ) ஜோடி 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ரீஸ் ஸ்டால்டர் (அமெரிக்கா)- செம் வெர்பீக் (நெதர்லாந்து) இணையை வீழ்த்தியது. தமிழகத்தை சேர்ந்த 34 வயதான ஸ்ரீராம் பாலாஜி பிரெஞ்சு ஓபனில் ருசித்த முதல் வெற்றி இதுவாகும். அநேகமாக ஒலிம்பிக்கில் ரோகன் போபண்ணாவுடன் இணைந்து விளையாடும் வாய்ப்பு ஸ்ரீராம் பாலாஜிக்கே கிடைக்கும் என்று தெரிகிறது. அதே சமயம் இந்தியாவின் யுகி பாம்ப்ரி- அல்பனோ ஆலிவெட்டி (நெதர்லாந்து) ஜோடி முதல் சுற்றுடன் நடையை கட்டியது.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனும், முதல் நிலை வீராங்கனையுமான இகா ஸ்வியாடெக் (போலந்து) 6-4, 6-2 என்ற நேர் செட்டில் மரிஸ் பவுஸ்கோவாவை (செக்குடியரசு) வீழ்த்தி 4-வது சுற்றுக்குள் நுழைந்தார். நேற்று தனது 23-வது பிறந்த நாளை கொண்டாடிய ஸ்வியாடெக்குக்கு பிறந்த நாள் பரிசாக இந்த வெற்றி அமைந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com