

கலபுரகி
கர்நாடகாவின் கலபுரகி நகரில் சந்திரசேகர் பாட்டீல் ஸ்டேடியத்தில் ஐ.டி.எப். டபிள்யூ35 டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், மகளிர் ஒற்றையர் இறுதி போட்டியில் இந்திய வீராங்கனைகளான வைஷ்ணவி அத்கர் மற்றும் அங்கிதா ரெய்னா இன்று விளையாடினார்கள்.
இதில், முதல் செட்டை கைப்பற்ற இருவரும் கடுமையாக போராடினர். எனினும், 7-6(3) என்ற புள்ளி கணக்கில் முதல் செட்டை அத்கர் கைப்பற்றினார். இதனை தொடர்ந்து 2-வது செட்டிலும் அத்கரின் கையே ஓங்கி இருந்தது. அவர் 6-4 என்ற புள்ளி கணக்கில் 2-வது செட்டை கைப்பற்றினார்.
இதனால், போட்டியில் 7-6(3), 6-4 என 2 செட்டுகளிலும் அத்கர் வெற்றி பெற்று, மற்றொரு இந்திய வீராங்கனையான ரெய்னாவை வீழ்த்தினார். அத்கர் சாம்பியன் பட்டமும் வென்றுள்ளார்.
அவருக்கு டபிள்யூ.டி.ஏ.வின் 35 தரவரிசைக்கான புள்ளிகள் கிடைத்தன. அதனுடன் ரூ.4 லட்சத்து 46 ஆயிரத்து 830 பரிசு தொகையும் கிடைத்தது. 2-ம் இடம் பிடித்த ரெய்னாவுக்கு 23 தரவரிசைக்கான புள்ளிகளும், ரூ.2 லட்சத்து 42 ஆயிரத்து 446 பரிசு தொகையும் கிடைத்தன.