மீண்டும் பயிற்சியை தொடங்கினார் பி.வி.சிந்து

பி.வி.சிந்து மீண்டும் பயிற்சியை தொடங்கினார்.
மீண்டும் பயிற்சியை தொடங்கினார் பி.வி.சிந்து
Published on

ஐதராபாத்,

தெலுங்கானாவில் ஸ்டேடியங்களை திறந்து விளையாட்டு நடவடிக்கைகளை தொடங்கலாம் என்று அந்த மாநில அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து இந்திய பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகளுக்கான தேசிய பயிற்சி முகாம் ஐதராபாத்தில் நேற்று தொடங்கியது. அங்குள்ள கோபிசந்த் அகாடமிக்கு தனது தந்தை ரமணாவுடன் சென்ற முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையும், உலக சாம்பியனுமான பி.வி.சிந்து காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை பயிற்சி மேற்கொண்டார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயிற்சியாளர் பார்க் டே சங்கை தனது சொந்த காரை அனுப்பி அகாடமிக்கு வரவழைத்த சிந்து, அவரது ஆலோசனைப்படி மட்டையை சுழட்டினார். தேசிய பயிற்சியாளர் கோபிசந்தும் சிந்துவுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

இந்த வாரத்தில் தினமும் இதே நேரத்தில் சிந்து பயிற்சியில் ஈடுபடுவார் என்று ரமணா தெரிவித்தார். இதே போல் சாய் பிரனீத், சிக்கி ரெட்டி ஆகியோரும் பயிற்சியை தொடங்கினர். கொரோனா தடுப்பு பாதுகாப்பு வழிகாட்டுதலின்படி பயிற்சி பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டிருந்தது. வெளியாட்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

மூன்றரை மாதங்கள் வீட்டிலேயே முடங்கி இருந்த 25 வயதான சிந்து கூறுகையில், நான் நல்ல நிலையில் இருக்கிறேன். நீண்ட இடைவெளிக்கு பிறகு பேட்மிண்டன் விளையாடினாலும் பெரிய அளவில் வித்தியாசத்தை உணரவில்லை. நான் ஏற்கனவே சொன்ன மாதிரி 2 வாரத்திற்குள் பழைய நிலைக்கு வந்து விடுவேன். ஊரடங்கு காலத்திலும் வீட்டிலேயே நான் இடைவிடாது நிறைய உடற்பயற்சிகளை செய்ததால், மீண்டும் பயிற்சியை தொடங்கிய போது எளிதாகவே இருந்தது. திட்டமிட்டபடி எல்லாமே சரியாக நகர்ந்தால் அக்டோபர் மாதம் டென்மார்க்கில் நடக்கும் உபேர் கோப்பை போட்டியில் பங்கேற்பேன். என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com