

லண்டன்
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் மேத்யூ பெர்ரெட்டினியை வீழ்த்தி, டிமிட்ரோவ் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் லண்டனில் நடந்து வருகின்றன. இதில், ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான போட்டி ஒன்றில் பல்கேரியாவை சேர்ந்த கிரிகோர் டிமிட்ரோவ் மற்றும் மேத்யூ பெரெட்டினி இடையேயான போட்டி ரசிகர்களால் பெரிதும் விரும்பி பார்க்கப்பட்டது. இருவரும் காயம் அடைந்து மீண்டு வந்துள்ளனர்.
அவர்கள், போட்டியில் தோற்றாலும் எதிர்தரப்பு வீரரை மரியாதையுடன் அணுகும் தன்மை கொண்டவர்கள். இந்த போட்டியில் இருவரும் வெற்றி பெற வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. எனினும், போட்டி என்றால் ஒருவர் மட்டுமே வெற்றி பெறுவார் என்பதே விதிமுறையாக உள்ளது.
இதில், முதல் 2 செட்டுகளை டிமிட்ரோவ் கைப்பற்றினார். அடுத்த 2 செட்டுகளில் பெரெட்டினி வெற்றி பெற்றார். இதனால், போட்டியில் வெற்றியை முடிவு செய்யும் 5-வது செட்டை நோக்கி ஆட்டம் சென்றது. இதில், 6-3 என்ற கணக்கில் செட்டை டிமிட்ரோவ் கைப்பற்றினார்.
இதனால், 6-3 6-4 3-6 5-7 6-3 என்ற செட் கணக்கில் பெர்ரெட்டினியை வீழ்த்தி, டிமிட்ரோவ் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார். அவர், 4-வது சுற்றில் ஆர்தர் பெரியை எதிர்த்து விளையாட உள்ளார்.