பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: அரைஇறுதியில் மரியா சக்காரி, சபலென்கா

லீக் சுற்று முடிவில் மரியா சக்காரி, அரினா சபலென்கா தங்கள் பிரிவில் முதல் இரண்டு இடங்களை பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறினர்.
image courtesy: wta twitter
image courtesy: wta twitter
Published on

டெக்சாஸ்,

'டாப்-8' வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்றுள்ள டபிள்யூ.டி.ஏ.இறுதி சுற்று எனப்படும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் போர்த் வொர்த் நகரில் நடந்து வருகிறது. இதில் வீராங்கனைகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு வீராங்கனையும் தங்கள் பிரிவில் உள்ள மற்றவர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். ரவுண்ட் ராபின் லீக் முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் அரைஇறுதிக்கு தகுதி பெறுவார்கள்.

இதில் 'நான்சி ரிச்சே' பிரிவில் நேற்று நடந்த ஒற்றையர் ஆட்டம் ஒன்றில் கிரீஸ் நாட்டு வீராங்கனை மரியா சக்காரி 6-2, 6-3 என்ற நேர்செட்டில் 68 நிமிடத்தில் ஒன்ஸ் ஜபிரை (துனிசியா) தோற்கடித்தார்.

மற்றொரு ஆட்டத்தில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா 6-3, 7-5 என்ற நேர்செட்டில் ஜெசிகா பெகுலாவை (அமெரிக்கா) வீழ்த்தினார். லீக் சுற்று முடிவில் மரியா சக்காரி (3 ஆட்டங்களிலும் வெற்றி), அரினா சபலென்கா (2 வெற்றி, ஒரு தோல்வி) ஆகியோர் தங்கள் பிரிவில் முறையே முதல் இரண்டு இடங்களை பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறினர்.

ஒன்ஸ் ஜபிர் (ஒரு வெற்றி, 2 தோல்வி), ஜெசிகா பெகுலா (3 ஆட்டங்களிலும் தோல்வி) ஆகியோர் அரைஇறுதி வாய்ப்பை இழந்து வெளியேறினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com