

துரின்,
ஆண்டின் இறுதியில் ஏ.டி.பி. இறுதிசுற்று எனப்படும் உலக ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஏ.டி.பி. இறுதி சுற்று உலக ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நேற்று தொடங்கியது.
இந்த போட்டியில் தரவரிசையில் டாப்-8 இடம் வகிக்கும் வீரர்கள் மட்டும் பங்கேற்பர். அவர்கள் 'ரெட்' மற்றும் 'கிரீன்' என இரு அணிகளாக பிரிக்கப்பட்டு உள்ளனர். ஒவ்வொரு வீரரும் தங்கள் பிரிவில் உள்ள மற்றவர்களுடன் தலா ஒரு முறை மோதுவர். ரவுண்ட்-ராபின் முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் வீரர்கள் அரைஇறுதிக்கு தகுதி பெறுவார்கள்.
இந்த நிலையில் கிரீன் பிரிவில் நேற்று நடந்த ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் மற்றும் நார்வேயைச் சேர்ந்த கேஸ்பர் ரூட் மோதினர். இந்த ஆட்டத்தில் நோவக் ஜோகோவிச் 7-6 (7-4), 6-2 என்ற நேர் செட்டில் கேஸ்பர் ரூட்டை தோற்கடித்தார்.