‘இந்த வெற்றிக்கு நீங்கள் தகுதியானவர்கள்’- பெங்களூரு மகளிர் அணிக்கு விராட் கோலி பாராட்டு

பெங்களூரு அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
‘இந்த வெற்றிக்கு நீங்கள் தகுதியானவர்கள்’- பெங்களூரு மகளிர் அணிக்கு விராட் கோலி பாராட்டு
Published on

5 அணிகள் பங்கேற்ற 4-வது மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல். 20 ஓவர்) கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 9-ந் தேதி தொடங்கியது. இந்த தொடரின் இறுதிப் போட்டி நேற்று குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள கோடாம்பி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மகளிர் அணி மற்றும் டெல்லி கேப்பிட்டல் மகளிர் அணி மோதின.

டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல் அணி முதலில் பேட்டிங் செய்து, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் வீராங்கனைகள் அதிரடியாக விளையாடி உயர்ந்த இலக்கை நிர்ணயித்தனர். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி தொடக்கம் முதலே தாக்குதலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆட்டத்தின் கடைசி ஓவரில் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ராதா யாதவ் மற்றும் நாடின் டி கிளார்க் ஜோடி பொறுப்புடன் விளையாடி 4 பந்துகளில் இலக்கை எட்டியது. இதன் மூலம் பெங்களூரு அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மகளிர் அணி 2-வது முறையாக டபிள்யூ.பி.எல். கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. பெங்களூரு அணியின் இந்த சாதனை வெற்றிக்கு பல்வேறு தரப்பினரும், விளையாட்டு வீரர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, பெங்களூரு மகளிர் அணிக்கு வாழ்த்து தெரிவித்து எக்ஸ் (X) சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "நீங்கள் ஒவ்வொருவரும் பெருமைப்படக்கூடிய மிகப்பெரிய வெற்றி இது. பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் வெற்றிக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் அணியினர் இந்த வெற்றிக்கு மிகவும் தகுதியானவர்கள்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com